அதிகாரம் – 13 – குறள் – 128

இலக்கியம்

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

விளக்கம்:-

தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின் – தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின், நன்று ஆகாது ஆகிவிடும் – அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும்.

சொற்களைக் காத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை இக்குறளின் மூலம் சொல்லுகிறார். நாம் சொல்லுகின்ற சொல் ஒவ்வொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறைய அறச்செயல்கள் செய்தாலும் ஒரே ஒரு சொல் அதாவது தீச்சொல் நமது அத்தனை அறச்செயல்களையும் இல்லாமல் செய்துவிடும். ஒரு குவளை பாலில் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் பால் முழுவதும் விஷமாகிவிடுமோ அப்படியே நாம் சொல்கின்ற தீச்சொல்லும் அப்படியே ஆகிவிடும்.

வார்த்தை என்பது மந்திரம். ஒரு சொல்லைச் சொன்னால் பொருள் விளையவேண்டும்.

சொல்லின் கண் வருகின்ற குற்றங்கள்:-

  1. தீங்கு பயக்கும் பொய்
  2. குறளை (புறங்கூறுதல்)
  3. கடுஞ்சொல்
  4. பயனில சொல்லுதல் (தேவையில்லாவற்றைப் பேசுதல்)

இந்த நான்கு குற்றங்களில் முதல் மூன்றுக் குற்றங்களை நாம் செய்யகூடாது என்று பரிமேலழகர் உரையெழுதுகிறார். நான்காவது குற்றமான பயனில சொல்லுதல் என்பதற்கு பின்னால் ஒரு தனி அதிகாரம் வரப்போகிறது.

கடின உழைப்பின் மூலம் வெளிப்படுகிற சக்தியை விடவும் வார்த்தைகளின் சக்தி அதிகம். ஆகவே இதனை நாம் கடைபிடித்து வாழ்வோமாக.

23 thoughts on “அதிகாரம் – 13 – குறள் – 128

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *