அதிகாரம் – 2 குறள் – 15
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை.
விளக்கம்;-
கெடுப்பதூஉம் – பூமியில் வாழ்வாரை பெய்யாது நின்று கெடுப்பது.
பெய்யாது நின்று கெடுக்கும். மறுபடி பெய்து கொடுக்கும். இதுவே மழை. மழை பெய்யாமலே இருந்தால் வறட்சி ஏற்பட்டு உலகம் அழிந்து விடும். ஆனால், ஒருபக்கம் மழை பெய்து வெள்ளம் வந்து அழிந்தாலும் பூமியின் மற்றொரு பகுதி அந்த மழையை வைத்து செழிப்பாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மழை பெய்தாலும் அதை வைத்தே வளருகின்ற தாவரங்கள் இவ்வுலகில் உண்டு.
மற்று என்ற சொல்;-
ஒரு விடயத்தைப் பற்றி பேசிவிட்டு அதற்கு எதிரான விடயம் பேசும் பொழுது மற்று என்ற சொல் போட வேண்டும். இது நமது அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் உள்ளது.
மாற்றம் – மற்றது, மற்றும்
ஏற்கெனவே சொன்ன செயலை மாற்றுவதற்கு போடும் சொல் இதற்கு வினை மாற்று என்று பெயர்.
ஆங்கு என்ற சொல்;-
மழை பெய்யாது நின்று எப்படி கெடுத்ததோ அதே அளவுக்கு பெய்து அதிகம் கொடுக்கும். இதற்கு மறுதலை தொழில் உவமம் என்று பெயர்.
உதாரணம்;-
வீட்டிலே அரிசியை கீழே கொட்டி விட்டோம். அம்மா எப்படி கொட்டினாயோ அப்படியே மறுபடியும் அள்ளு என்று சொல்லுகிறார். இதுவே மறுதலைத் தொழில் உவமம்.
பெய்யாது கெடுத்தது. அதற்கு நேர்மாறாக நின்று பெய்து வாழ வைக்கும் மழை. எனவே இங்கே ஆங்கே என்ற சொல்லைப் பயன்படுத்தினார் வள்ளுவர்.
எல்லாம் என்ற சொல்;-
மழை பெய்து அழிந்தால் மனித முயற்சிகளால் உருவாக்கப்பட்ட நிலம், உணவுப்பொருட்கள் எல்லாம் அழியும். அது போல மழை பெய்து இவைகள் மறுபடியும் எல்லாம் உருவாகும். இவை எல்லாவற்றையும் தொகுக்க வேண்டும். எனவே, எல்லாம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
எடுப்பதூஉ எல்லாம் வல்லது மழை என்றே இருக்க வேண்டும். இந்த எல்லாம் என்ற சொல் வல்லது என்ற சொல்லைக் கூப்பிடுகிறது. இக்குறளிலே வல்லது என்ற சொல் வந்தால்தான் மொழி முழுமை பெறும். இதற்கு அவாய் நிலை என்று பெயர்.