விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.
விளக்கம்;-
விசும்பு – வானம், ஆகாயம்
விசும்பின் துளி – மழை
மற்று, ஆங்கே என்ற சொற்களுக்கான விளக்கத்தை கடந்த குறளிலே பார்த்தோம். தாவரம் ஓரறிவுள்ள உயிர். அந்த தாவர இனத்துக்குள்ளே மிகவும் தாழ்ந்தது புல். தாவர இனத்திலே மிகவும் கீழ்மையானதும் புல்தான். இந்தப் புல்லும் மழைத்துளி இல்லாவிட்டால் முளைக்காது.
பசும்புல்லினதும் தலை காண்பரிது என்று பரிமேலழகர் உரைக்குறிப்பு எழுதுகிறார். தாவர இனத்திலேயே மிகவும் கீழ்மையானது புல். எனவே, {பசும்புல்லினதும்} ம் என்பது இங்கே இழிவுச் சிறப்பும்மை என்று இலக்கணம் கூறுகிறார்.
மழை இல்லாவிட்டால் ஆறறிவு உள்ள மனிதனுக்கும் உணவு இல்லை. ஓரறிவு உள்ள புல்லையும் காண முடியாது.